கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என்

 ✨✨✨✨✨✨✨✨

வள்ளலார் பாடிய திருவருட்பா

நேரிசை வெண்பா

ஆறாம் திருமுறை

106. சுத்த சிவநிலை

✨✨✨✨✨✨✨✨✨

1. கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என்

எண்ணிற் கலந்தே இருக்கின்றான் - பண்ணிற்

கலந்தான்என் பாட்டிற் கலந்தான் உயிரில்

கலந்தான் கருணை கலந்து.

2. எல்லா நலமும் எனக்கே கொடுக்கின்றான்

எல்லாம் செயவல்லான் என்பெருமான் - எல்லாமாய்

நின்றான் பொதுவில் நிருத்தம் புரிகின்றான்

ஒன்றாகி நின்றான் உவந்து.

3. எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்

பண்ணுகின்றேன் பண்ணுவித்துப் பாடுகின்றான் - உண்ணுகின்றேன்

தெள்ளமுதம் உள்ளந் தெளியத் தருகின்றான்

வள்ளல்நட ராயன் மகிழ்ந்து.

4. சித்தியெலாந் தந்தே திருவம் பலத்தாடும்

நித்தியனென் உள்ளே நிறைகின்றான் - சத்தியம்ஈ

தந்தோ உலகீர் அறியீரோ நீவிரெலாம்

சந்தோட மாய்இருமின் சார்ந்து.

5. அய்யாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே

எய்யேன் மகனேஎன் றெய்துகின்றான் - ஐயோஎன்

அப்பன் பெருங்கருணை யார்க்குண் டுலகத்தீர்

செப்பமுடன் போற்றுமினோ சேர்ந்து.

6. அப்பாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே

அப்பா மகனேஎன் றார்கின்றான் - துப்பார்

சடையான்சிற் றம்பலத்தான் தானேதான் ஆனான்

உடையான் உளத்தே உவந்து.

7. தானேவந் தென்உளத்தே சார்ந்து கலந்துகொண்டான்

தானே எனக்குத் தருகின்றான் - தானேநான்

ஆகப் புரிந்தானென் அப்பன் பெருங்கருணை

மேகத்திற் குண்டோ விளம்பு.

8. பாலும் கொடுத்தான் பதிதிறக்கும் ஓர்திறவுக்

கோலும் கொடுத்தான் குணங்கொடுத்தான் - காலும்

தலையும் அறியும் தரமும் கொடுத்தான்

நிலையும் கொடுத்தான் நிறைந்து.

9. வெவ்வினையும் மாயை விளைவும் தவிர்ந்தனவே

செவ்வைஅறி வின்பம் சிறந்தனவே - எவ்வயினும்

ஆனான்சிற் றம்பலத்தே ஆடுகின்றான் தண்அருளாம்

தேன்நான் உண் டோங்கியது தேர்ந்து.

10. வஞ்சவினை எல்லாம் மடிந்தனவன் மாயைஇருள்

அஞ்சிஎனை விட்டே அகன்றனவால் - எஞ்சலிலா

இன்பமெலாம் என்றனையே எய்தி நிறைந்தனவால்

துன்பமெலாம் போன தொலைந்து.

11. அம்மை திரோதை அகன்றாள் எனைவிரும்பி

அம்மையருட் சத்தி அடைந்தனளே - இம்மையிலே

மாமாயை நீங்கினள்பொன் வண்ணவடி வுற்றதென்றும்

சாமா றிலைஎனக்குத் தான்.

12. நானே தவம்புரிந்தேன் நானிலத்தீர் அம்பலவன்

தானேவந் தென்னைத் தடுத்தாண்டான் - ஊனே

புகுந்தான்என் உள்ளம் புகுந்தான் உயிரில்

புகுந்தான் கருணை புரிந்து.

13. ஒன்றே சிவம்என் றுணர்ந்தேன் உணர்ந்தாங்கு

நின்றேமெய்ஞ் ஞான நிலைபெற்றேன் - நன்றேமெய்ச்

சித்தியெலாம் பெற்றேன் திருஅம்ப லத்தாடி

பத்திஎலாம் பெற்ற பலன்.

14. தூக்கங் கெடுத்தான் சுகங்கொடுத்தான் என்னுளத்தே

ஏக்கந் தவிர்த்தான் இருள்அறுத்தான் - ஆக்கமிகத்

தந்தான் எனைஈன்ற தந்தையே என்றழைக்க

வந்தான்என் அப்பன் மகிழ்ந்து.

15. வாட்டமெலாம் தீர்த்தான் மகிழ்வளித்தான் மெய்ஞ்ஞான

நாட்டமெலாம் தந்தான் நலங்கொடுத்தான் - ஆட்டமெலாம்

ஆடுகநீ என்றான்தன் ஆனந்த வார்கழலைப்

பாடுகநீ என்றான் பரன்.

16. தான்நான் எனும்பேதந் தன்னைத் தவிர்த்தான்நான்

ஆனான்சிற் றம்பலவன் அந்தோநான் - வானாடர்

செய்தற் கரியதவம் செய்தேன் மகிழ்கின்றேன்

எய்தற் கரியசுகம் ஏய்ந்து.

17. சுத்த வடிவும் சுகவடிவாம் ஓங்கார

நித்த வடிவும் நிறைந்தோங்கு - சித்தெனும்ஓர்

ஞான வடிவுமிங்கே நான்பெற்றேன் எங்கெங்கும்

தானவிளை யாட்டியற்றத் தான்.

18. நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்சொல் வார்த்தைஅன்றி

நான்உரைக்கும் வார்த்தைஅன்று நாட்டீர்நான் - ஏன்உரைப்பேன்

நான்ஆர் எனக்கெனஓர் ஞானஉணர் வேதுசிவம்

ஊன்நாடி நில்லா உழி.

19. ஆரணமும் ஆகமமும் ஆங்காங் குரைக்கின்ற

காரணமும் காரியமும் காட்டுவித்தான் - தாரணியில்

கண்டேன் களிக்கின்றேன் கங்குல்பகல் அற்றவிடத்

துண்டேன் அமுதம் உவந்து.

20. துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்தசிவ

சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் - என்மார்க்கம்

நன்மார்க்கம் என்றேவான் நாட்டார் புகழ்கின்றார்

மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.

21. பன்மார்க்கம் எல்லாம் பசையற் றொழிந்தனவே

சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே - சொன்மார்க்கத்

தெல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான்

கொல்லா நெறிஅருளைக் கொண்டு.

22. சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப

நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் - ஓதுகின்ற

பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம்

வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.

23. சிந்தா குலந்தவிர்த்துச் சிற்றம் பலப்பெருமான்

வந்தான் எனைத்தான் வலிந்தழைத்தே - ஐந்தொழிலும்

நீயேசெய் என்றெனக்கே நேர்ந்தளித்தான் என்னுடைய

தாயே அனையான் தனித்து.

24. கூகா எனஅடுத்தோர் கூடி அழாதவண்ணம்

சாகா வரம்எனக்கே தந்திட்டான் - ஏகாஅன்

ஏகா எனமறைகள் ஏத்துஞ்சிற் றம்பலத்தான்

மாகா தலனா மகிழ்ந்து.

25. நாடுகின்ற தெம்பெருமான் நாட்டமதே நான்உலகில்

ஆடுகின்ற தெந்தைஅருள் ஆட்டமதே - பாடுகின்ற

பாட்டெல்லாம் அம்பலவன் பாத மலர்ப்பாட்டே

நீட்டெல்லாம் ஆங்கவன்றன் நீட்டு.

26. சத்தியஞ்செய் கின்றேன் சகத்தீர் அறிமின்கள்

சித்திஎலாம் வல்ல சிவம்ஒன்றே - நித்தியம்என்

றெண்ணுமெண்ணத் தாலேநம் எண்ணமெலாம் கைகூடும்

நண்ணுமின்பத் தேன்என்று நான்.

27. நானே தவம்புரிந்தேன் நம்பெருமான் நல்லருளால்

நானே அருட்சித்தி நாடடைந்தேன் - நானே

அழியா வடிவம் அவைமூன்றும் பெற்றேன்

இழியாமல் ஆடுகின்றேன் இங்கு.

28. எவ்வுலகும் அண்டங்கள் எத்தனையும் நான்காண

இவ்வுலகில் எந்தை எனக்களித்தான் - எவ்வுயிரும்

சன்மார்க்க சங்கம் தனைஅடையச் செய்வித்தே

என்மார்க்கம் காண்பேன் இனி.

29. சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி

நேத்திரங்கள் போற்காட்ட நேராவே - நேத்திரங்கள்

சிற்றம் பலவன் திருவருட்சீர் வண்ணமென்றே

உற்றிங் கறிந்தேன் உவந்து.

30. வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்

வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்

சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை

என்ன பயனோ இவை.

31. சாகாத கல்வித் தரம்அறிதல் வேண்டுமென்றும்

வேகாத கால்உணர்தல் வேண்டுமுடன் - சாகாத்

தலைஅறிதல் வேண்டும் தனிஅருளால் உண்மை

நிலைஅடைதல் வேண்டும் நிலத்து.

32. பொய்உரைஎன் றெண்ணுதிரேல் போமின் புறக்கடையில்

மெய்யுரைஎன் றெண்ணுதிரேல் மேவுமினோ - ஐயனருள்

சித்திஎலாம் வல்ல திருக்கூத் துலவாமல்

இத்தினந்தொட் டாடுகிற்பான் இங்கு.

33. வான்வந்த தேவர்களும் மால்அயனும் மற்றவரும்

தான்வந்து சூழ்ந்தார் தலைக்கடையில் - தேன்வந்த

மங்கை சிவகாம வல்லியொடும் எம்பெருமான்

இங்குநடஞ் செய்வான் இனி.

34. சத்திஎலாம் கொண்டதனித் தந்தை நடராயன்

சித்திஎலாம் வல்லான் திருவாளன் - நித்தியன்தான்

ஊழிபல சென்றாலும் ஓவாமல் இவ்விடத்தே

வாழிநடஞ் செய்வான் மகிழ்ந்து.

35. இன்று தொடங்கியிங்கே எம்பெருமான் எந்நாளும்

நன்று துலங்க நடம்புரிவான் - என்றுமென்சொல்

சத்தியம்என் றெண்ணிச் சகத்தீர் அடைமின்கள்

நித்தியம்பெற் றுய்யலாம் நீர்.

36. என்உடலும் என்பொருளும் என்உயிரும் தான்கொண்டான்

தன்உடலும் தன்பொருளும் தன்உயிரும் - என்னிடத்தே

தந்தான் அருட்சிற் சபையப்பா என்றழைத்தேன்

வந்தான் வந்தான்உள் மகிழ்ந்து.

37. செத்தாரை எல்லாம் திரும்ப எழுப்புதல்இங்

கெத்தால் முடியுமெனில் எம்மவரே - சித்தாம்

அருட்பெருஞ் சோதி அதனால் முடியும்

தெருட்பெருஞ் சத்தியம் ஈ தே.

38. இவ்வுலகில் செத்தாரை எல்லாம் எழுகஎனில்

எவ்வுலகும் போற்ற எழுந்திருப்பார் - செவ்வுலகில்

சிற்றம் பலத்தான் திருவருள்  பெற்றார்நோக்கம்

உற்றவரை உற்றவர்கள் உற்று.

39. யான்புரிதல் வேண்டுங்கொல் இவ்வுலகில் செத்தாரை

ஊன்புரிந்து மீள உயிர்ப்பித்தல் - வான் புரிந்த

அம்பலத்தான் நல்லருளால் அந்தோநான் மேற்போர்த்த

கம்பலத்தால் ஆகும் களித்து.

40. என்னே உலகில் இறந்தார் எழுதல்மிக

அன்னே அதிசயமென் றாடுகின்றார் - இன்னே

திருவம் பலத்தான் திருநோக்கம் பெற்றார்க்

குருவம் பலத்தேஎன் றுன்.

41. ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை

நாடாதீர் பொய்உலகை நம்பாதீர் - வாடாதீர்

சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினிஇங்

கென்மார்க்க மும்ஒன்றா மே.

42. மார்க்கமெலாம் ஒன்றாகும் மாநிலத்தீர் வாய்மைஇது

தூக்கமெலாம் நீக்கித் துணிந்துளத்தே - ஏக்கம்விட்டுச்

சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின் சத்தியம்நீர்

நன்மார்க்கம் சேர்வீர்இந் நாள்.

43. இந்நாளே கண்டீர் இறந்தார் எழுகின்ற

நன்னாள்என் வார்த்தைகளை நம்புமினோ - இந்நாள்

அருட்பெருஞ் சோதி அடைகின்ற நாள்மெய்

அருட்பெருஞ் சத்தியம்ஈ தாம்.

44. ஏமாந் திருக்கும் எமரங்காள் இவ்வுலகில்

சாமாந்தர் ஆகாத் தரம்பெறவே - காமாந்த

காரத்தை விட்டுக் கருதுமினோ இத்தருணம்

நீரத்தைச் சேர்வீர் நிஜம்.

45. வீணே பராக்கில் விடாதீர் உமதுளத்தை

நாணே உடைய நமரங்காள் - ஊணாகத்

தெள்ளமுதம் இன்றெனக்குச் சேர்த்தளித்தான் சித்தாட

உள்ளியநாள் ஈதறிமின் உற்று.

46. போற்றி உரைக்கின்றேன் பொய்என் றிகழாதீர்

நாற்றிசைக்கண் வாழும் நமரங்காள் - ஆற்றலருள்

அப்பன்வரு கின்றான் அருள்விளையாட் டாடுதற்கென்

றிப்புவியில் இத்தருணம் இங்கு.

47. ஆளுடையான் நம்முடைய அப்பன் வருகின்ற

நாள்எதுவோ என்று நலியாதீர் - நீள

நினையாதீர் சத்தியம்நான் நேர்ந்துரைத்தேன் இந்நாள்

அனையான் வருகின்றான் ஆய்ந்து.

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்